தினம் தோன்றும் அதிசயங்கள்

          

                         

            விடியலில் புது விடியல் தந்து
            தன் கரம் பற்றி…..
            வையமதற்கு இயக்கம் தந்து
            மாலையில் மாலையிட்ட மடந்தையை
            விட்டுச்செல்லும் கதிரவன்
            முதல் அதிசயம்.
 

                  
            பருவம் கண்ட காளையாய்
            துள்ளி துள்ளி கரை வந்து
            கிடைப்பதை சுருட்டிச்செல்லும்
            கள்வனாய்….
            ஓயாமல் போராடும் குணம் தரும்
            இந்த கடலழகன்
            ஓர் அதிசயம்….

        

                     

          மடிக்க முடியா சேலையாய்-விண்
          மீன்கள் பூக்கும் சோலையாய்.
          தன் குழந்தையை காணவில்லை
          என்றால் அழுது துடிக்கும்
          தாயாய் - இருக்குமிந்த
          இருண்ட வானம்…..
          பேரதிசயம்.
         

                    
          தன் தலை உயர்த்தி உயர்ந்தவன்
          நான் என்று.
          உயர்வதென்றால்
          வானம் தொடுபவனாய்….
          தாழ்வதென்றால்
          சரிந்து மடிபவனாய்….
          இன்று வரை வானம் தொட
          போராடும் மலை
          நான்காவது அதிசயம்.

                          

  ஓர் நாளுக்குள்ளே,
            செடியன்னையிடம் கருவாகி
            மொட்டுவிட்டு பூத்து
            மாலையில் மாலையேறாவிட்டால்
            உதிர்ந்து அழகின்
            நிலையாமையை உணரவைக்கும்
            பூக்களும் அதிசயம்தான்.
           

                       
            வருடினால் தீயாய்
            சீண்டினால் புயலாய்
            வெறுத்தால் சூறாவளியாய்
            விரும்பினால் மேகத்தை குளிரூட்டி
            மழை தந்து வாழ்விக்கும்
            காற்றும் ஓர் அதிசயம்.      

Leave a Reply